சிக்கன் டிக்கா

தேவையானப் பொருட்கள்:

கோழிக்கறி – முக்கால் கிலோ
தயிர் – கால் கப்
இஞ்சி விழுது – 2 மேசைக்கரண்டி
பூண்டு விழுது – 2 மேசைக்கரண்டி
மிளகுத்தூள் – அரை தேக்கரண்டி
சீரகத்தூள் – அரை தேக்கரண்டி
ஜாதிபத்ரி – சிறிது
ஜாதிக்காய் – சிறிது
ஏலக்காய் – 3
மிளகாய்த்தூள் – அரைத் தேக்கரண்டி
மஞ்சள்தூள் – அரைத் தேக்கரண்டி
எலுமிச்சை சாறு – 4 மேசைக்கரண்டி
கடலைமாவு – 2 மேசைக்கரண்டி
எண்ணெய் – 5 மேசைக்கரண்டி
வெண்ணெய் – சிறிது
உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை:

கோழிக்கறியினை சுத்தம் செய்து, எலும்புகளை நீக்கி சற்று பெரிய துண்டங்களாக செய்து கொள்ளவும்.கோழியின் கால் பாகத் துண்டுகளாகக் கேட்டு வாங்கினால் இன்னும் சிறப்பு. ஒவ்வொரு கால்களையும் நான்கு துண்டுகளாக செய்து கொள்ளலாம்.

ஏலக்காய், ஜாதிபத்ரி, ஜாதிக்காய் அனைத்தையும் ஒன்றாய் சேர்த்து பொடியாக அரைத்து ஒரு தேக்கரண்டி அளவிற்கு எடுத்துக் கொள்ளவும்.தயிரினை நன்கு அடித்துக் கொண்டு அதனுடன் இஞ்சி, பூண்டு விழுது, மிளகுத்தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், எலுமிச்சை சாறு, தேவையான உப்பு, கடலைமாவு அனைத்தையும் சேர்த்து எண்ணெய் விட்டுக் கலந்து கொள்ளவும் இந்த கலவையினை கோழித்துண்டங்கள் மீது பூசி சுமார் நான்கு மணி நேரம் நன்கு ஊறவிடவும்.

துண்டங்களை சொருகு கம்பியில் நுழைத்து 350 டிகிரி F க்கு சூடேற்றப்பட்ட ஓவனில் வைத்து 10 நிமிடங்களுக்கு வேகவைத்து எடுக்கவும். தந்தூரி அடுப்பில் 8 நிமிடங்கள் போதுமானது. 3 நிமிடங்களுக்கு ஒரு முறை எடுத்து வெண்ணெய் தடவி மீண்டும் வேகவிடவும். மசாலா கலவையுடன் கொத்தமல்லி, புதினா அரைத்து சேர்த்து மற்றொரு வகை டிக்காவினையும் தயாரிக்கலாம்.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *